Jan 31, 2018

சாதி ஒழிப்பிற்கான சோஷலிஸ்ட் வேலைத் திட்டம்



- ஆய்வுக் குழு, அரவிந்த் மார்க்சியக் கல்வியகம்.


பாட்டாளி வர்க்க அரசானது அனைத்துவிதமான பூர்ஷுவா அரசாங்கப் பண்ணைகள், பழைய ஜாகிர்களின் மாபெருமளவிலான விவசாய நிலங்கள், நகர்புற தொழிலதிபர்கள்-வணிகர்கள்-அதிகாரத்துவத்தினரின் நிலச்சொத்துகள், பெரு விவசாயிகளின் பண்ணைகள் மற்றும் தோட்ட-பண்ணைகள் அனைத்தையும் (எந்தவித நஷ்டஈடுமின்றி) தேசியமயப்படுத்தும்; மக்கள் அங்கு அரசு தொழிற்சாலையில் பணிபுரிவது போல் பணிபுரிவார்கள், கட்சியின் தலைமையில் பணிபுரியும் அனைவரும் சேர்ந்து தேர்தெடுக்கும் கமிட்டிகள் நிர்வாகப் பொறுப்பைக் கொண்டிருக்கும். குலாக்குகள்-நிலக்கிழார்கள்-விவசாயிகளின் நிலச்சொத்துகள் எவ்வித நஷ்ட ஈடுமின்றி எடுத்துக்கொள்ளப்பட்டு, கூட்டுப் பண்ணைகளாக மாற்றப்படும். அரசு மற்றும் கூட்டுப்ப பண்ணைகளில், நிலமற்ற மக்கள் அனைவரும் பணிபுரிவர், சம அந்தஸ்துடன் கூட்டு நிர்வாக நடவடிக்கையிலும் ஈடுபடுவர்.  கூட்டுறவு வேளாணில் இணைந்துகொள்ளத் தயாராக இருக்காத சிறு உடைமை விவசாயிகள் கூட்டுறவுமயமாக்கலுக்காக ஊக்குவிக்கப்படுவர். சில இடங்களில், கூட்டுறவு வேளாணுக்குத் தயாராக இல்லாத நபர்கள், தங்களுடைய தனியார் பண்ணைகளில் உழைப்பாளரை கூலிக்கமர்த்த தடை விதிக்கப்படும். உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவது தடுக்கப்படும். அதேபோல், தனியார் வேளாணில் ஈடுபடுபவர்களுக்கு, கூட்டுறவுப் பண்ணைக்கு அளிக்கப்படும் விதைகள், தண்ணீர், மின்சாரம், உரம் போன்ற சலுகைகள் கொடுக்கப்பட மாட்டாது. மெல்ல மெல்ல, பொருளாதார பாதுகாப்புக்கான உத்திரவாதத்தைக் கண்டு, அரசு மற்றும் கூட்டுப் பண்ணைத் தொழிலாளர்களின் வளர்ச்சியைக் கண்டு ஏற்படக்கூடிய சோஷலிசத்தின் மீதான நம்பிக்கையினால், தனியார் மற்றும் கூட்டுறவு வேளாணில் ஈடுபடுபவர்கள் கூட கூட்டுப் பண்ணை முறையினால் ஈர்க்கப்படுவர். இந்நடைமுறையின் இறுதி கட்டம் என்பது ஒட்டுமொத்த விவசாயத்தையும் தேசியமயமாக்குவதாகும். இவ்வாறாக, தனியார் நிலவுடைமை மற்றும் ஆண்டாண்டு காலமாக நிலமற்றவர்களாக இருக்கும் தலித்துகளின் பிரச்சினைக்கும் முடிவு கட்டப்படும், சாதியமைப்பின் முக்கிய கிராமப்புறத் தூணை சோஷலிசம் தகர்த்தெறியும்.

பூர்ஷுவா அரசை அழித்த உடன், பாட்டாளி வர்க்க அரசானது சிறு மற்றும் பெரிய, தேசிய மற்றும் அந்நிய நிறுவனங்களின் தொழிற்சாலைகளைக் கைப்பற்றி தேசியமயமாக்கும், கட்சியின் தலைமையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட கமிட்டி நிர்வாகப் பொறுப்பை வகிக்கும். தொழிற்சாலைகளில், பன்முகத் திறமைக்கான பயிற்சிகள் மூலம், உழைப்புப் பிரிவினை என்பது நெகிழ்வுத் தன்மையுடனும், நகரும் தன்மையுடனும் இருக்கும். இதில் எல்லோரும் அனைத்து விதமான வேலைகளையும் (தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படும் பணிகள் தவிர) செய்ய வேண்டும். இவ்வாறாக, “உயர்வான” மற்றும் “தாழ்வான” வேலைகள் என்னும் வேறுபாடுகள் மற்றும் “சுத்தமான” மற்றும் “அசுத்தமான” பணிகள் என்னும் வேறுபாடுகள் மெல்ல மெல்ல மறையும்.  கழிவுநீர்-வடிகால் சுத்திகரிப்புக்கான ஆலைகளில், இயந்திரமயமாக்கலும், திட்டமிட்ட அரசாங்க ஏற்பாடுகளும் கொண்டுவருவதன் மூலம், “அசுத்தமான” பணிகளின் வகைப்பாடு மாற்றப்படும். அதன்பிறகு, சோஷலிச உணர்வுநிலை அதிகரிகரித்து வரும்போது, மக்களிடையே இருக்கக்கூடிய பண்பாட்டு வேறுபாடுகளுக்கு முடிவு கட்டும், நெகிழ்வான உழைப்புப் பிரிவினையில்கூட பலவந்தத்தைப் பிரயோகிக்க வேண்டிய அவசியத்தை அது குறைக்கும். ஒருவேளை சிலர் மீது பலவந்தம் தேவைப்பட்டால் அது நியாயத்தின் பொருட்டு பிரயோகிக்கப்படும்.

பங்குச் சந்தைகள் உடனடியாக மூடப்படும். வணிகத் துறையும் தேசியமயப்படுத்தப்படும் என்பதால், பரிவத்தனையில் மக்களின் கட்டுப்பாடு நிறுவப்படும். அதன் மூலம் பதுக்கல்-லாபமீட்டும்-இடைத்தரகுக்கு (ஹோர்டிங்-புராஃபிட்டீரிங்-புரோக்கிங்) முடிவு கட்டப்படும். மேலும், இறுக்கமான பாரம்பரியக் குடும்பத் தொழில் அமைப்பும் உடைக்கப்படுவதானது, சாதிய அமைப்பில் தாக்கம் செலுத்தும். தனியார் கந்துவட்டி தடை செய்யப்பட்டு, கடுமையான சிறைத் தண்டனைக்குரியதாக்கப்படும். ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், சம்பந்தப்பட்டவருக்கு அரசின் நிர்வாகக் கமிட்டி மற்றும் கூட்டு நிறுவனங்களின் உதவி வழங்கப்படும்.

பொருளாதாரப் பாகுபாடு தவிர்த்து, கல்வி நிறுவனங்கள் சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் முக்கிய மையங்களாக இருக்கின்றன. சோஷலிச அரசு எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை என்னவெனில், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் தேசியமயப்படுத்துதல், பயிற்சி நிறுவனங்களுக்குத் தடை செய்வது. மேலும், இலவச, சமச்சீர் கல்வியை அறிவிப்பது சோஷலிச அரசின் முக்கியப் பொறுப்பாகும். விஞ்ஞானபூர்வ கல்வி அமைப்பில், நாட்டம் மற்றும் இயற்கைத் திறன் அடிப்படையில் வெவ்வேறு துறைக் கல்வி அளிக்கப்படும், பல திறன்கள் உண்டாக்கப்படும், நெகிழ்வான உழைப்புப் பிரிவினையானது, பல வேலைகளை, வெவ்வேறு தொழில்களில்  மாறி மாறி செய்ய வகை செய்யும். படிப்படியான  சமச்சீரான சம்பளம், சமச்சீரான வாழ்க்கை முறை மற்றும் உடல் உழைப்பு, மூளை உழைப்புக்கு இடையிலான வேறுபாடு குறைவது ஆகியவற்றின் மூலம், சமூக அந்தஸ்துடன் தொழிலை இணைந்துப் பார்க்கும் போலி கவுரவும் முடிவுக்கு வரும். சோஷலிசக் கல்வியானது உழைப்புப் பண்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுபோல், அனைத்து இளைஞர்களின் பண்பாட்டு மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும். பொருளாதார மட்டத்தில் ஏற்றத்தாழ்வைக் குறைக்கையில், கல்வியில், பண்பாட்டு நிலையில் வேறுபாடுகள் மறைந்து போகும், இப்போது சாதியப் பாகுபாட்டை தகர்ப்பது மேலும் சுலபமாகி விடும்.

அடுத்து, மருத்துவம். தனியாக பயிற்சி செய்வது, தனியார் மருத்துவமனைகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கண்டிப்புடன் தடை செய்யப்படும். ஒட்டுமொத்த மருத்துவ சேவையும் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். சோஷலிசமானது ஏகாதிபத்தியக் காப்புரிமைகளில் நம்பிக்கைக் கொண்டிருக்காது. அனைத்து மருந்துகளையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும். அனைத்து மக்களுக்கும் மருத்துவம் இலவசமாக்கப்படும். சோஷலிச மருத்துவக் கொள்கையை ஒருவர் தெரிந்துகொள்ள விரும்பினால், சோவியத் ஒன்றியம், சோஷலிச சீனா மற்றும் கியூபாவில் இத்துறையில் மேற்கொண்டுள்ள அற்புதமானப் பணியைப் பற்றி படித்தறியலாம்.  இலவச மருத்துவக் கல்வி மற்றும் இலவச, சமச்சீர் மருத்துவ அமைப்பு மூலம் தலித்துகளின் சமூக அந்தஸ்தில் ஏற்றம் ஏற்படும். 

சோஷலிச வீட்டுவசதி கொள்கையானது சாதி பாகுபாட்டை ஒழிப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். வீடு கட்டும் பணிகள் அனைத்தையும் சோஷலிச அரசே கையில் எடுத்துக்கொள்ளும். கட்டுமானக் காண்டிராக்டர்கள் சாதாரண தொழிலாளர்களாவார்கள். வீடற்ற மக்கள் அனைவருக்கும், சேரியில் வசிப்பவர்களுக்கும் வீட்டு வசதியை செய்துகொடுப்பதே பாட்டாளி வர்க்க அரசின் முதல் பணி. பழைய அரண்மணைகள், பல வீடுகள் வைத்திருக்கும் உடைமையாளர்களின் கூடுதல் வீடுகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் இதர பகட்டான மாளிகைகளை, பெரிய பங்களாக்களைக் கைப்பற்றி குடியிருப்புப் பகுதிகளாக மாற்றப்படும். அதேவேளை குடியிருப்புக் காலனிகள் பெரியளவில் உருவாக்கப்படும்.

தொடக்கத்தில், சோஷலிசக் கல்வியைப் பெற்ற முதல் தலைமுறை விஞ்ஞானிகள், பொறியாளர்கள், நிபுணர்கள் உருவாகும் வரை, இந்தத் துறை வல்லுனர்களுக்கு சம்பளத்தில் மட்டுமல்லாது, வீட்டு வசதியிலும் சில சலுகைகள் அளிக்கப்பட வேண்டும், அப்போதுதான் உற்பத்தி அமைப்பை சுமூகமாக இயக்க முடியும். பிந்தையக் கட்டத்தில் அது தேவைப்படாது. இந்தத் தொடக்கக் கட்டங்களைக் கடந்தபின்னர், சோஷலிச அரசானது எல்லா வீடுகளையும் அரசுடைமையாக்கும், அனைத்து வசதிகளுடன் கூடிய வீட்டை ஒவ்வொரு குடிமகனுக்கும்  உத்திரவாதமளிக்கும். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோடு, வீடுகளை சமச்சீரான முறையில் வசதியுள்ளதாகக் கட்டிட, பழைய குடியிருப்புகளை மறுவடிவமைக்கவும், உழைப்பு சக்தியை அணிதிரட்டி புதிய காலனிகளை உருவாக்கவும் பெரியளவிலான கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஏடாகூடமான முறையில்  அமைந்திருக்கும் கிராமப்புறங்கள் அனைத்து வசதிகளும் உடைய நவீன காலனிகளாக மாற்றப்படும். கூடுதல் நிலம் மற்றப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும். அரசிற்கு சொந்தமான சமச்சீரான  வீடுகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுவிட்டால் (தனிக்குடும்பத்தின் அடிப்படையில்),  சமூகப் பாகுபாட்டின் முக்கியக் காரணமாக இருக்கும் தலித்துகள்  (மற்றும் இதரப் பணியாளர்கள்) ஒதுக்கப்படுவது தீர்ந்துவிடும்.  தேசியமயமான விவசாயம், தொழிற்சாலை மற்றும் கிராமப்புறங்கள், நகரங்கள் இரண்டிலும் சமச்சீரான வசதி கொண்ட வீடு (மற்றும் போக்குவரத்து, பொழுதுபோக்கு வசதிகள்) ஆகியவற்றால் தொழிற்சாலை மற்றும் விவசாயத்திற்கு இடையிலான வேறுபாடு மற்றும் நகரங்கள் கிராமங்களுக்கு இடையிலான வேறுபாடு மறையத் தொடங்கும். அதே நடைமுறையில், உடல் உழைப்பு மற்றும் மூளை உழைப்புக்கு இடையிலான இடைவெளியும் குறையத் தொடங்கும். ஒரு சோஷலிச சமூகத்தில்,  இந்த மூன்று ஏற்றத்தாழ்வுகளும் தனிமனிதருக்கிடையிலான உறவில் பூர்ஷுவா சிறப்புரிமையின்  பொருளாயத அடிப்படையாக திகழும். இம்முன்று ஏற்றத்தாழ்வும் மறைகையில் பூர்ஷுவா சிறப்புரிமைகளும் மறையும்.  அதனைத் தொடர்ந்து பூர்ஷுவா சாதியமைப்பும் முழுஅழிவை நோக்கி நகரும்.

பூர்ஷுவா சமூகத்தில் மதமும் பூர்ஷுவா சமூகத்திற்கு ஏற்ற வகையில் தகவமைக்கப்பட்டு, பூர்ஷுவா சாதியமைப்பின் ஒரு தூணாகி விட்டது. சோஷலிச சமூகத்தில், கம்யூனிஸ்ட் கட்சியானது, மத எதிர்ப்பு மற்றும் அறிவியல்சார் பகுத்தறிவு பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொள்ளும், அதேவேளை சிவில் உரிமையின் அடிப்படையில், சோஷலிச அரசானது, ஒவ்வொரு குடிமகரின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டுக்கான உரிமையையும் மதிக்கும். ஆனால் சமூக-அரசியல் வாழ்வில் மதத்தின் தலையீடு தடைசெய்யப்பட்டிருக்கும். தொடக்க விழாக்களில் மதச் சடங்குகளை நடத்துவது, பள்ளிகளில் பிரார்த்தனை செய்வது, ஒலிபெருக்கிகள் வைத்து கீர்த்தனைகள் பாடுவது, திருமணம் மற்றும் மதப் பேரணிகள் நடத்தி பொதுமக்கள் வாழ்வுக்கு இடையூறு ஏற்படுத்துவது, மதப் பள்ளிகள்,  பொது இடங்களை வாடகைக்கு எடுத்து சமகம் (சீக்கிய ஆன்மீகக் கூட்டங்கள் – மொ.ர்) போன்ற நிகழ்ச்சிகளில் சமூக செல்வத்தை வீணடிப்பது ஆகியவை தடை செய்யப்படும். மக்களின் மத உணர்வுகளைக் கணக்கில்கொண்டு, பழைய மதத் தலங்கள் விட்டு வைக்கப்படும், ஆனால் அதன் தர்மகர்த்தாக்கள் மற்றும் மடாதிபதிகளிடமிருந்து அரசே நிர்வாகத்தை எடுத்துக்கொள்ளும்.  ஆசிரமங்கள்-கோயில்கள்-வக்ஃபுகள்-குருத்வாராக்கள்-சர்ச்சுகள்  போன்ற மத நிறுவனங்களிடம் உள்ள நிலம் மற்றும் பணம் அனைத்தையும், அரசு கையகப்படுத்தும் (இந்த அளவற்ற சொல்வதத்திலிருந்தும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்தும்,  சோதனைக்குப் பின்பு செல்வந்தர்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்படும் தங்கம் மற்றும் கறுப்பு பணம் கையகப்படுத்தப்படும். சோஷலிச புராதன மூலதனத் திரட்டிலிருந்து  ஒரு பகுதி இப்படி வசூலிக்கப்படும்). 

மத நிறுவனங்களை அமைத்தல், அல்லது மதத்தின் அடிப்படையில் எந்தவிதமான சமூக-அரசியல் அணிதிரட்டலில் ஈடுபடுவதும் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும். மதச் சடங்குகள் நடத்தி திருமணம் செய்துகொள்ள ஒருவருக்கு சுதந்திரம் இருக்கும், ஆனால் பதிவுக்குப் பின்பே அத்திருமணம் அங்கீகரிக்கப்படும்.  பெண்ணின் ஒப்புதல் இன்றி ஒரு திருமணம் அங்கீகரிக்கப்படாது. விவாகரத்துக்கான சட்ட நடைமுறை எளிமையானதாக இருக்கும். வரதட்சனை என்பது  கடுமையான தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும். இவ்வாறாக, சமூக வாழ்வில், மதத்தின் தலையீட்டைக் குறைப்பதின் மூலம் சாதி ஒழிப்பு நடைமுறைத் துரிதப்படுத்தப்படும்.

பூர்ஷுவா குடும்ப அமைப்பு மற்றும் அகமண முறை ஆகியவை பெண் ஒடுக்குமுறைக்கு  அடித்தளமாக இருக்கின்றன. உலகளாவிய மற்றும் கட்டாய சமச்சீர் இலவசக் கல்வியோடு, அனைவருக்கும் வேலைவாய்ப்பு உத்திரவாதம் ஆகியவற்றோடு, குழந்தைகள் காப்பகம், மழலையர் பள்ளி, பெரியளவிலான கூட்டு சமையல்கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு பெண்கள் கொடுமையான வீட்டு உழைப்பு என்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவர். இதன் விளைவாக, சமூக வாழ்வில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும். தந்தையை (மற்றும் கணவர்) சார்ந்திருக்கும் நிலை இருக்காது, எந்த அழுத்தங்களும் இன்றி தங்களது வாழ்க்கை பற்றிய முடிவுகளை அவர்களே சொந்தமாக எடுக்க முடியும். இந்த நிலை மாற்றங்கள் மூலம், காதல் திருமணங்கள் மற்றும் கலப்புத் திருமணங்கள் பெருகும், சாதியின் சுவர், சரிந்து விழத் தொடங்கும்.

சோசலிச அரசானது, அனைத்து சாதி பஞ்சாயத்துகள், கப் பஞ்சாயத்துகள், சாதி சங்கங்கள், சாதிக் கூட்டங்கள் ஆகியவற்றை சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்கும், அத்தகைய முயற்சிகள் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்படும். கல்வி அமைப்புக்கு அப்பால், அனைத்து பண்பாட்டு ஊடகங்கள் மற்றும் இதர ஊடகங்களை, சோஷலிச மதிப்பீடுகளைப் பிரச்சாரம் செய்யப் பயன்படுத்துவதோடு, சாதியமைப்புக்கு எதிரான பிரச்சாரங்களுக்காகவும் சோஷலிச அரசு பயன்படுத்தும். இதன் மூலம் புதிய சமூகத்தின் புதிய குடிமகர்களின் மனங்களில் இதுபோன்ற கொடுமையான பழக்கவழக்கங்களுக்கு இடமில்லாமல் போகும்.

இவ்வாறாக, சோஷலிசமானது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் உற்பத்தி உறவுகளில் தொடர் மாற்றங்கள் மூலமாகவும், அதேவேளை மேற்கட்டுமானத்திலும்,  முழுவீச்சுடன் கூடிய முடிவற்ற வகையிலான கலாச்சார புரட்சியின் மூலமாகவும் சாதியமைப்பை அடிக்கட்டுமானம் மற்றும் மேற்கட்டுமானத்திலிருந்து ஒழிக்கும். சோஷலிசத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறுவதற்கானப் பயணம் மிக நீளமானதே, ஆனால் சாதி ஒழிப்பு என்பது சிலப் பத்தாண்டுகள் மட்டுமே பிடிப்பதாக  இருக்கும்.

‘சாதியப் பிரச்சினையும், மார்க்சியமும்’ என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட அரவிந்த் மெமோரியலின் நான்காம் கருத்தரங்கில் (12-16 மார்ச் 2013, சந்திகர்) சமர்ப்பிக்கப்பட்ட தலைமையுரை.  

சாதியப் பிரச்சினையும் மார்க்சியமும்: தொடரும் விவாதம் என்னும் நூலிலிருந்து.



No comments:

Post a Comment