Oct 5, 2016

குறிப்பிட்டதொரு கூலி உழைப்பை அவமதிக்கும் பார்ப்பனியவாதம்

குறிப்பிட்டதொரு உழைப்பை (தொழிலை) கேவலமானதென்றும், பிறிதொரு உழைப்பை (பணியை) மேன்மையானதென்றும் கருதுவது பார்ப்பனியவாதமாகும். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் அங்கமான பாரதி புத்தகாலயத்தில் பணிபுரியும் சிராஜ்தின் என்பவர் இத்தகைய கருத்தை முன்வைத்து (சீரியலுக்கு வசனம் எழுதி பிழைப்பதை கேவலமானது என்கிறார்) முகநூலில் உரையாடுகிறார். அதிலும் குறிப்பாக அமைப்பின் ஒரு வெகுஜன நிறுவனத்தில் பணிபுரிவதையே முழுநேர அரசியல் பணி என்று சொல்லி எதிர் தரப்பின் கூலி உழைப்பை அவமானப்படுத்திப் பேசுவதென்பது, அவரது தனிப்பட்டக் கருத்தே ஆகினும் அமைப்பிடம் முறையிடுவதற்கான அத்தனை நியாயங்களையும் கொண்டிருக்கிறது.

1.  அமைப்பில் இருக்கும் அதிகாரத்தைக் கொண்டே அவர் இத்தகைய தனிமனித தாக்குதலைத் தொடுக்கிறார்.

2.  அமைப்பில் இருப்பதைப் புனிதப்படுத்தியும், கூலி உழைப்பைக் கேவலப்படுத்தியும் அந்நபர் கருத்து தெரிவிக்கிறார்.

3. தான் சார்ந்திருக்கும் அமைப்பைப் புனிதப்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்தான் அமைப்பை ஒரு தனிப்பட்ட விவாததிற்கு கேடயமாகப் பயன்படுத்துகிறார். ஆகவே, உழைப்பில் மேன்மையானது, கீழானது என்று அந்த அமைப்பு ஏதேனும் நிலைப்பாடு கொண்டிருக்கிறதா என்று கேட்டறிவது அவசியமாகிறது.

4. பொதுவெளியில் நடந்த விவாதமாகையால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை டேக் (Tag) செய்து விளக்கம் கேட்பதற்கான அவசியத்தை அந்நிறுவனப் பணியாளர்தான் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.

5.  அப்படி விளக்கம் கேட்கும்போது, இது அந்த தனிநபரின் கருத்து என்று சொல்வது ஓரளவுக்கு ஏற்புடையது. ஆனால், அமைப்பை டேக் செய்வது அத்துமீறல் என்று சொல்வதன் மூலம், சம்பந்தப்பட்ட பிரச்சினையின் ஆதாரக் கேள்வியை / நியாயத்தை இரண்டாம்பட்சமாக்கி அல்லது மழுப்பலாக நிராகரித்து, பாதிக்கப்பட்டவரை அராஜகவாதியாகவும், நாகரீகமற்றவராகவும் முத்திரைகுத்தி, அமைப்பில் உள்ள லும்பன்களைக் காக்கும் செயலாகிறது.

6. இடதுசாரி அமைப்பின் உறுப்பினர் / பணியாளர் என்பவர் ஏதோ தனியார் நிறுவன உறுப்பினர்போல் நாம் கருதிவிட முடியாது. இவர்கள் அமைப்பின் பிரதிநிதிகளாக, பொதுவெளியில் இடதுசாரி அமைப்பின் முகங்களாகத் தென்படுகின்றனர் / இயங்குகின்றனர்.

அப்படிப்பட்ட இடதுசாரி அமைப்பின் பணியாளர் ஒருவர் ஒருவகை கூலி உழைப்பைக் கேவலப்படுத்திப் பேசும்போது, அது அத்தகைய உழைப்பு பற்றிய தவறான மதிப்பீடுகளை பொதுமக்கள் மனதில் விதைப்பதாகிறது. இது அந்த தனிநபரின் கருத்தா அல்லது அமைப்பின் மதிப்பீடே அத்தகையாதா என்பதை பொதுவெளியில் விளக்கம் கேட்பது ஜனநாயகப்பூர்வமானதே அன்றி அத்துமீறல் ஆக முடியாது.

அத்துமீறல் என்ற பதில்கள் மூலம் அந்த அமைப்பின் தலைமை நிர்வாகியானவர் பணியாளரின் (‘புரட்சியாளரின்’) தவறை கண்டும்காணாமல் போவதாகப் புரிந்துகொள்ள, அல்லது தம் பணியாளரைக் காக்க நினைக்கிறார் என்று புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. சம்பந்தப்பட்ட அந்தப் பணியாளருக்கு கண்டனங்களைப் பதிவு செய்வதே அறிவுநாணயமிக்க செயலாக இருக்க முடியும்.





No comments:

Post a Comment