Jan 31, 2016

கியூபக் கல்வி

கியூபக் கல்வி
-               மைதிலி சிவராமன்
-               தமிழ் மொழிபெயர்ப்பு – கொற்றவை


உலகில் எந்தவொறு சமூக நிறுவனமோ அல்லது கலாச்சார நிறுவனமோ தனித்திருப்பதில்லை, அதிலும் கல்வி என்பது வெற்றிடத்தில் சஞ்சரிப்பதில்லை. ஒவ்வொரு சமூகத்திலும் கல்வி என்பது, தம் மக்கள் மனதில் விதைக்கப்படவேண்டியதாக அச்சமூகத்தின் ஆட்சியாளர்களால் தீர்மானிக்க்கப்படுகிறது.  அவர்களின் இலக்கை  மதிப்புமிக்கதாக ஏற்றுக்கொள்ளும் வகையில் கல்வி முடக்கிவிடப்படுகிறது. முதலாளித்துவ நாடுகளில், கல்வியானது அதன் ஆட்சியாளர்கள் மறைமுகமாகவும், திருட்டுத்தனமாகவும் வரையறுக்கும் தேவைகளுக்குச் சேவை செய்வதாக உள்ளது. தங்களது கல்வி முறைகள் இலட்சியத் தன்மை கொண்டதாகவும், அனைத்து நம்பிக்கைகளுக்கும் இசங்களுக்கும் நியாயம் செய்வதாகவும், எந்தப் பாகுபாடுகளையும் கொண்டிராததாகவும் அவர்கள் கூறி வந்தாலுமேகூட, முதலாளித்துவ நாடுகள் தங்கள் ஆளும் வர்க்க கருத்தியலை இளம் மனங்களில் எண்ணற்ற குரூரமான, நுட்பமான வழிகளில் திணித்து வருகின்றன. இதற்கு நேரெதிராக, சோஷலிச நாடுகள் கல்வியானது கருத்தியல் நடுநிலையோடு செயல்படுகிறது என்றோ அல்லது செயல்பட வேண்டும் என்றோ முன்வைப்பதில்லை. சமூக ரீதியாக விரும்பப்படும் இலட்சியங்களுக்கேற்ற வகையில் மக்களின் சிந்தனையை வடிவமைப்பதில், முதன்மையில் கல்வியே ஒரு சிறந்த கருவியாகச் செயல்படுகிறது என்று சோஷலிச நாடுகள் கருதுகின்றன. சோஷலிச நாடுகளில் கருத்தியல் சார்ந்த ‘மூளைச் சலவை’ என்பது வெளிப்படையானது, நேரடியானது, துணிவு மிக்கது. அவர்களுடைய கல்வியின் உள்ளடக்கமானது மனம் கவரும் வகையில் அரசியல் தன்மைக் கொண்டது.

கியுபக் குடியரசில் அக்குடியரசின் சமூக இலக்கிற்கு ஏற்றவகையில், அதாவது  பொதுவுடைமைவாதியாக (கம்யூனிஸ்டாக) ஒருவரை உருவாக்குவதற்குக் கல்வி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்டறியும் ஒரு சிறு முயற்சியே இக்கட்டுரை. ஃபிடல் காஸ்த்ரோ சொன்னது போல், கம்யூனிசம் என்பது ‘அடிப்படையில் மனிதர்களின் விழுப்புணர்வு வளர்ச்சி குறித்தது’. ஒரு சமூகமானது தனது சோஷலிச அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்கு ஏற்ப மக்களின் சோஷலிச விழிப்புணர்வும் வளர்ச்சி பெறும். இதன் விளைவாக அவ்வளர்ச்சியானது, கியூப பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களை அதன் அன்றாடப் பிரச்சினைகளை சோஷலிச வழிமுறையைப் பின்பற்றி வெற்றிகரமாகத் தீர்ப்பதில் அடங்கியுள்ளது. இவ்வாறாக கியூபக் கல்வியானது இரட்டைக் குறிக்கோள்களை உள்ளடக்கியதாக உள்ளது: புதிய சமூகம் முன் வைக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திறன்களை வளர்த்தெடுப்பது அத்தோடு புதிய சமூகத்தில் உழன்று கொண்டிருக்கும் பழைய மனப்பான்மைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கெதிராகப் போர் புரிவது.


 கியூபக் கல்வி குறித்துப் பேசுகையில், வகுப்பறை என்பது கற்பதற்கான தளங்களில் ஒன்று மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் கல்வி கற்பிக்கப்படுகிறது. பட்டறைகள், களப்பயிற்சிகள், நாடகம் மற்றும் இராணுவப் பயிற்சிகள் என பல்வகைப்பட்ட தளங்களில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இவ்வனைத்து செயல்முறைகளின்  கூட்டுவடிவமானப் புரட்சி -  பதினோரு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் விடுதலைப் படைகள் அன்றாடம் எதிர்கொண்ட பலப் பிரச்சினைகளைப் போன்று பிரச்சினைகளை எதிர்கொண்டுவரும் அந்தப் புரட்சி என்பதே கியூபாவின் சிறந்தப் பள்ளிக்கூடமாகக் கருதப்படுகிறது.

கியூபாவின் கல்வி அமைச்சர் சொன்னது போல், “எமது நாட்டின் கல்வித் தத்துவமானது இந்நாட்டின் ஆயுதப் போராட்டத்தோடு இணைந்து பிறந்தது. பிறகு அது கல்வியறிவுப் பிரச்சாரத்தோடும், தாய் நாடு காக்கும் போராட்டத்தில் கூலிப்படையினருக்கு எதிரான பிரச்சாரத்தோடும் சேர்த்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.’ கியூபக் கல்வியின் உள்ளடக்கத்தையும் இலக்கையும் அறிந்துகொள்ள ஒருவர் தன் ஆய்வுகளைப் பள்ளிக்கூடங்களில் மட்டுமல்லாது கியூபாவின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் செய்தல் வேண்டும்.

அந்த மூன்று இலக்குகள்

கியூபக் கல்வி மூன்று முதன்மையான குறிக்கோள்களை வெளிப்படுத்துகிறது; மேட்டிமைத்தன எதிர்ப்பு (anti-elitist) மற்றும் மக்கள் சார்புடையதாகச் செய்வது ; கியூபப் புரட்சியில் தொடர் ஈடுபாட்டுணர்வைப் புகட்டுவது - சே உருவகித்த சர்வதேச புரட்சிகர ஆற்றலை அதாவது உலகின் எந்த மூலையிலும் காணப்படும் அநீதி, ஒடுக்குமுறை ஆகியவற்றை எதிர்க்கும் சீற்றத்தையும்,  விருப்பத்தையும் உயிர்ப்போடு வைத்திருக்கும்படிச் செய்வது. ஒன்றோடொன்று தொடர்புடைய இந்த இலக்குகளை அடையும் வகையில் கல்வியின் ஒவ்வொரு அம்சமும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேட்டிமைத்தன எதிர்ப்பு: மேட்டிமைத்தன எதிர்ப்புக் கல்வியில் இரண்டு அம்சங்கள் உள்ளன: அனைவருக்கும் தரமானக் கல்வி கிடைக்கும் வகையில் செயல்படுவது அத்தோடு அறிவுஜீவிகளுக்கும் உடல் உழைப்பாளிகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது. முதல் பிரச்சினை, அதாவது ஒரு விலையுயர்ந்த பண்டமாக இருந்த கல்வி – புரட்சிக்கு முன்னர் பள்ளிக் கூடத்தையேக் கண்டிராத ஏழு லட்சம் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கும் வகையில் போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு – அனைவருக்கும் அடிப்படை மற்றும் சம உரிமையின் அடிப்படையில் கல்வி கிடைக்கும் வகையில் செயல்முறைப்படுத்தப்பட்டது.

விளைவு வியக்கத்தக்கதாக இருந்தது: ஒரே வருடத்தில், கல்லாமை 29 சதவிகிதத்திலிருந்து 3.3 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. நெடுந்தொலைவிலுள்ள மலைப்பகுதிகள் மற்றும் சாலையற்ற பகுதிகளைச் சென்றடைவது அவ்வளவு எளிதானக் காரியமாக இருக்கவில்லை. அதற்குத் தேவைப்படும் பொருள் வளம், மனித வளம் எங்கிருக்கிறது? ஆசிரியர்கள் எங்கிருந்து வருவார்கள்? பயிற்சி பெற்ற பல நபர்கள் யாங்கீத் துறைமுகத்திற்குத் (yankee haven) தப்பி ஓடிவிட்டிருந்தனர். ‘எவருக்கு அதிகம் தெரியுமோ அவர் குறைவாக அறிந்தவருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்’ எனும் ஒரு எளிய கொள்கையினைப் பிரச்சாரம் செய்து கற்றவர்கள் பெரும் திரளாகத் திரட்டப்பட்டார்கள்.

ஒரு லட்சம் இளைஞர்கள் திரட்டப்பட்டு ஆயிரக்கணக்கான அறிவியக்கப் படைப்பிரிவுகளாகப் பகுக்கப்பட்டார்கள். குறிப்பிடத்தக்க வகையில், இளைஞர்கள் வரதேரோவில் கூடினார்கள் – அதன் மணல் நிறைந்த கடற்கரையும், மரகதப் பச்சை நீரும் அதுவரை அமெரிக்கச் செல்வந்தர்களுக்கு விடுமுறையைக் கழிக்கும் ஒரு கொண்டாட்டத் தலமாகவே இருந்தது  - ஆனால், அன்று இளைஞர்கள் கூடி கல்வியறிவவின்மையை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெரிவதற்காக வாக்குறுதி எடுக்கும் தலமாக மாறியது. ஆசிரிய இளைஞர்கள் புரட்சியின் பிரதிநிதிகளாக விவசாயிகளின் வீட்டில் தங்கியிருந்து பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும்படி பணியமர்த்தப்பட்டனர்.

பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வாழ்நாளில் கிராமப்புறங்களுக்கேச் சென்றதில்லை. புரட்சியின் ஆன்மாவே அவர்களைத் தாங்கிப் பிடித்து வந்தது. ஆசிரியர், கற்றறிந்தவர் என இரு தரப்புக்கும் இந்தப் பிரச்சார இயக்கங்கள் கல்வியளித்தன. தங்களது குடிமக்களில் பெரும்பாலானோர் எத்தகைய வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதை ஆசிரியர்கள் நேரடியாகவே கண்டனர்.

புரட்சிகரப் பணியின் வீச்சு அவர்களின் முகத்தில் அறைந்து அதன் முக்கியத்துவத்தை உரைத்தது. அதில் அவர்களின் சொந்த பாத்திரமும், அது கோரும் தியாகமும் அவர்களுக்குத் தெளிவாகப் புரிந்தது.  அடர் இருளிலும், மோசமான குடிசைகளிலும் அறியாமைக்கு எதிராகவும், உணர்ச்சியின்மைக்கு எதிராகவும் அவர்கள் நிகழ்த்தும் போரானது புரட்சியை கியூபாவின் இதயத்துடிப்பாகக் கொண்டு சேர்த்தது என்பதை அவர்கள் உணர்ந்தனர். பிறகு ஒவ்வொரு கியூபனும் பெருமையாகச் சொல்ல முடிந்தது: ‘உங்கள் நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றமானது எந்தப் புள்ளியில் மேலெழத் தொடங்கியது. அத்தகைய ஒரு மாபெரும் எழுச்சியின் குறியீடு என்ன என்று பின்வரும் காலங்களில் எவரேனும் கேட்டால், கல்வியறிவிக்கும் இயக்கமே எங்கள் முன்னேற்றத்தின் தொடக்கமாக இருந்தது, ஒவ்வொரு இளைய ஆசியரும் ஏந்திச் சென்ற கல்வி எனும் அந்த ஒளி விளக்கே அதன் குறியீடு என்று நாங்கள் சிறு தயக்கமுமின்றி உரைப்போம்.’

1961 உலக கல்வியறிவித்தல் பிரச்சாரமானது (அந்த மகத்தான முயற்சியின் அதிகாரப்பூர்வப் பெயர்) தன்னளவில் அதுவே ஒரு மாபெரும் கல்வியானது: அர்ப்பணிப்பும், உறுதிப்பாடும் நிறைந்த ஓர் நாடு எத்தகைய இலக்கை அடைய முடியும் என்பதை ஒவ்வொரு கியூபருக்கும் அது கற்றுக்கொடுத்தது. ஒவ்வொரு கியூபரும் பார்க்கும் வகையில், ‘கல்வியரிவற்றவர்கள் மற்றும் அவர்களின் ஆசியர்களுக்கிடையேயும், நகரத்திலிருந்து நாட்டுப்புறம் வரையிலும் வாழும் ஒட்டுமொத்த குடும்பங்களுக்கும் இடையேயும் கல்வியறிவின்மை எனும் தாழ்மை நிலையைக் களைவதற்காக …… ஒரு மாபெரும் இணைச் சகோதரத்துவத்தை இவ்வழிமுறை ஏற்படுத்தியது’.

ஹவானாவின் ஐந்தாம் அவென்யூ - வடமேல் திசையில் இருக்கும் அதன் ஏகாதிபத்திய சகாவின் பெயரைக்கொண்ட ஒரு தலம்.  ஒரு காலத்தில் கியூப மேல்தட்டு வர்க்கத்தின் பிரத்யேக வாழ்விடமாக இருந்தது அத்தலம், ஆனால் இப்போது ஹவானா மிகவும் திறமை வாய்ந்த கிராமப்புற கியூப மாணவர்களைக் கொண்டிருந்தது. ஆடம்பரம், தனிப்பட்ட வாழ்வியல் மற்றும் பெரும் பணம் என்பதற்கு அடையாளமாக இருந்த இடமானது இப்போது கல்வியில் கியூபாவின் புதிய அனுகுமுறையின் அடையாளமாகிப் போனது.

புரட்சிகர அறிவுஜீவி: கியூபா வழங்கி இருக்கக்கூடியவற்றில் மிகச் சிறந்ததைப் பெற்ற  திறமை வாய்ந்த அக்குழந்தைகள் ஒரு தனித்த மேல்தட்டு அறிவுஜீவிக் குழுக்களாகிவிட்டால், பிறகு அது புரட்சிகரக் குறிக்கோள்களுக்கு சாவு மணி அடித்துவிடும். உண்மையில், அது தற்கொலைக்கு நிகரானதாகி விடும். 1959க்கு முந்தைய காலத்திலிருந்து கியூபத் தலைவர்கள் மீது தனிநபர்கள் நம்பிக்கையைன்மையை பெற்றிருந்த வரலாறு ஒன்றிருக்கிறது. புரட்சிக்கு முந்தைய காலகட்டத்து அறிஞர்களிடையே மூன்று உள்ளார்ந்த பலவீனங்களை அவர்கள் அடையாளம் கண்டிருந்தனர்:  அகவயவாதம், சமூகத்தின் உண்மையான நடைமுறையை அறியாது ஊகங்களின் அடிப்படையில் கலாச்சார மட்டத்தில் தம்மையே ஒரு புரட்சியின் பிரதினிதியாகக் கருதிக்கொள்ளும் ஒரு போக்கு அவர்களிடையே இருந்தது. ‘அறிவுஜீவிப் பணியாளர்கள் தனிநபர்வாதத்திற்குள் வீழும் ஆபத்து என்றென்றைக்கும் இருக்கிறது. இதன்விளைவாக ஆக்கப்பூர்வமான, படைப்பாற்றல் மிக்க நபர்களாக உருவாவதற்குப் பதிலாக பக்கவாட்டிலிருந்து கவனித்து ஒருவித எதிரிடை அனுகுமுறைக்குள் அவர்கள் வீழ்ந்துவிடக்கூடும்.’ வரலாற்றிலிருந்தும், சமூக நடைமுறையிலிருந்தும், மக்கள் போராட்டங்களிலிருந்தும் விலகி நெடுந்தொலைவு சென்றுவிட்டதன் விளைவே தனிநபர்வாதம் என்று அவர்கள் கருதினார்கள்.  ஹவானா பல்கலைக்கழக மாணவர்களில் பலர் புரட்சியில் பங்குபெற்றனர் என்றாலும், பல்கலைக்கழகமானது தன்னளவில் விலகியே இருந்தது.

ஓர் அறிஞ்ர், தன் துறையில் எவ்வளவு தலைசிறந்தவராக இருந்தாலும், புரட்சிகர சிந்தனைக்கு அர்ப்பணிப்பற்றவராக இருந்தால், சோஷலிஸ்ட் கியூபா அவரை நிராகரித்தது. அவர் ஒரு விசுவாசியாக இருக்க வேண்டும்.  பலகலைக்கழகத்தின் செயல்பாட்டுப் பாணியானது மற்ற துறைகளின் செயல்பாட்டுப் பாணியோடு இசைந்திருத்தல் வேண்டும். கூட்டு வேலையின்   படைப்பாற்றலுக்கு வழி விடுத்து ‘தனித்த அசலான படைப்பாளர்’ எனும் பழைய கருத்து விலக வேண்டியிருந்தது; ஊக ஆய்வுகள் மக்களின் உண்மைத் தேவைகள் குறித்த ஆய்வுகளுக்கு வழிவிட வேண்டியிருந்தது; அவ்வாய்வுகள் பயன்தரும் செயல்பாடுகளை நோக்கியதாகவும் இருக்க வேண்டும்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஹவானா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையில் உரையாற்றியபோது இவ்வாறு சொன்னார்: ‘அரசியல், சமூகம் மற்றும் எண்ணிலடங்கா கருத்தியலுக்கான ஆய்வகம் நம் நாடு. பிரச்சினைகள், கேள்விகள், பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த கொந்தளிப்பு நிலவுகிறது…. இந்த உண்மை நடைமுறை குறித்த ஆய்வானது…. பேராசிரியர்கள், மாணவர்கள் என்று உங்கள் ஒருவருக்கும் ஆய்வு செய்வதற்கும் கற்பதற்குமான சிறந்த வழி. புரட்சிக்குத் தோள் கொடுக்க பல்கலைக்கழகங்களுக்கு இது மட்டுமே வழி என்றும்கூட சொல்லலாம்.’

புரட்சி முன்வைக்கும் கேள்விகளின் மீது கவனம் செலுத்துவதன் மூலம் பல்கலைக்கழகங்கள் புரட்சிகர நடவடிக்கைகளில் தங்கள் பங்கேற்பைத் தொடங்க வேண்டும். பழைய பிரச்சினைகள் மற்றும் புதிய பிரச்சினைகளைப் புதிய வழிமுறைகள் கொண்டு தீர்ப்பதற்கு உதவ வேண்டும். பழைய சமூகத்தில், வேலையின்மை ஒரு பிரச்சினையாக இருந்தது.  புதிய சமூகத்தில், மனிதவளப் பற்றாக்குறையும், தனிநபர்களின் திறனை எவ்வாறு மேம்படுத்துவது என்பதும் கேள்விக்குறியதாய் இருக்கிறது. பயங்கரவாதத்தையும், பட்டினியையும் ஓர் இயக்கமுறையாக பழைய சமுதாயம் பயன்படுத்தியது. வாழ்வதற்காகவே ஒரு மனிதன் வேலை செய்தான். ஒரு சோஷலிச சமுதாயத்தில் கற்பனையில்கூட அதற்கு இடமில்லை. வேலை செய்ய வேண்டுமே எனும் அச்சத்திற்கு அப்பாற்பட்டு ஒரு நபர் எவ்வாறு ஊக்குவிக்கப்படலாம்? இதுபோன்ற கேள்விகளில் அறிவுஜீவிகளின் கவனத்திற்குரியதாய் இருக்க வேண்டும்.

மக்களிடமிருந்து ஒதுங்கி தம் பணிகளை செய்துவந்ததே அறிவுஜீவிகளின் பலவீனங்களின் மையப் பிரச்சினையாக இருந்தது போய், இப்போது கியூப அறிஞர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில், வயல்களுக்குச் சென்று விவசாயிகளிடமிருந்து கற்றனர், தங்களது சொந்த உழைப்பின் வியர்வையிலிருந்து கற்றனர்.

உடல் உழைப்பு: கியூபக் கல்வியுடன் பின்னப்பட்ட இரண்டாவது இலக்கை இப்போது நாம் காணவிருக்கிறோம் – புரட்சியியோடு தொடர் ஈடுபாட்டுணர்வைப் புகட்டுவது. புரட்சியை உயிர்ப்போடு வைத்திருத்தலும், ஒருங்கிணைத்தலும் கியூப பொருளாதாரத்தையே பெருமளவில் சார்ந்திருந்தது. சர்க்கரை விளைச்சலே அதற்கு முக்கிய விசையாக இருந்தது. சர்க்கரை அறுவடைக்கான இலட்சியம் மிகுந்த இலக்குகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்: ஒவ்வொரு கியூபரும், அவர் ஒரு விஞ்ஞானியோ, ஓர் அறிஞரோ, ஒரு மாணவரோ, ஓர் எழுத்தரோ அல்லது ஓர் ஓவியரோ எவராக இருப்பினும் வயல்களில் வேலை செய்ய வேண்டும். அறுவடைக் காலத்தின் போது அனைத்து அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் விடுமுறையளிக்கப்பட்டது. அமைச்சர்கள், அதிகார வர்க்கத்தினர், எழுத்தாளர்கள் மற்றும் வேளான் பணியாளர்கள் என அனைவரும், அந்த இரக்கமற்ற கியூப வெய்யிலின் கீழ் வியர்வை சிந்தினர். ‘மற்றவரைக் காட்டிலும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதே எனக்கிருக்கும் கூடுதல் சிறப்பு’ என அடிப்படை தொழில்களுக்கான அமைச்சர் சொன்னது சற்று மிகையானது என்றாலும் உண்மை அதுவே.

இந்த வழிமுறையானது புரட்சியின் நண்பர்களிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டது. பின்னவர்களோ அதனை அடிமை உழைப்பு என்று அழைத்தார்கள்,  முன்னவர்களோ வளங்களைத் தவறாக  ஒதுக்கீடு செய்வது என்றார்கள். வேளான் பொருளாதாரப் பேராசிரியர் ஒருவர் மூங்கில் வயல்களில் அரிவாளை தப்பும் தவறுமாகப் பிடித்துக்கொண்டு என்ன செய்யப்போகிறார்? அதேபோல் ஒரு தூதர், ஸ்காட்ச் விஸ்கி அளித்து  ஐநாவில் செல்வாக்கு செலுத்தி கியூபாவுக்கு மேலும் சில நட்புறவுகளை ஏற்படுத்துவதன் மூலம் புரட்சிக்கு சிறந்த சேவை செய்ய முடியாதா? ஆடல் நங்கைகளையும், கவிஞ்ர்களையும் மூங்கில் வெட்டச் சொல்வது முட்டாள்தனமானது.  அவர்கள் செடிகளை பாழடித்துவிடுவார்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், விவசாயிகள் மூங்கில் வெட்டட்டும் மற்றவர் தம் வழக்கமானத் தொழில்களை மேற்கொள்ளட்டும்.

செயல்பாட்டுத் திறன் – சந்தேகமேயில்லை, இந்த விமர்சனங்களுக்கு டெப்ரேயின் அழகாக செதுக்கப்பட்ட பதில் இதோ: ’புதிய மனிதனின் உருவாக்கத்தில், எவரும் எவரையும் விட மேலானவர் அல்ல. இதன்படி உழைப்பின் சிறப்புரிமையைப் பொறுத்தவரை, கியூபத் தொழிலாளரும் கல்வியின் சிறப்புரிமையைப் பெறுகிறார்; அதேபோல் கல்வியின் சிறப்புரிமையைப் பொறுத்தவரை, அறிஞர் ஒருவர் உற்பத்தி உழைப்பில் பங்கேற்கும் சிறப்புரிமையைப் பெறுகிறார். இராணுவ ஆக்கிரமிப்பை முறியடிக்கும் போராட்டத்தின் போது, ஏகாதிபத்தியவாதியின் குண்டுகள் ஒரு கவிஞனையும், மூங்கில் வெட்டுபவரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. மேலும் அவர் கேட்டார், ‘ஒரு அறிவுசார் தொழிலாளர், உடல் உழைப்பாளியைக் காட்டிலும் தான் மேன்மையானவர் என்று எந்தத் தெய்வீக உரிமையின் பேரில் வலியுறுத்துகிறார், சுரண்டலுக்கெதிரான போராட்டத்தில் அனைத்து தொழிலாளர்களிலிருந்தும் எந்த உரிமையின் அடிப்படையில் விலகி நிற்கிறார்?’ (லத்தீன் அமெரிக்கா பற்றியக் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: ரோபின் ப்ளாக்பர்ன் ).

மனித உழைப்பு பற்றிய கல்வியிக்குக் கிடைத்த மதிப்பின் மூலம் உடல் உழைப்பு மீதான ஒரு மரபான இகழ்ச்சியை எதிர்த்தபடியே, வேலை என்பது ஒரு மனிதனின் ஆகச்சிறந்த ஆற்றலை வெளிக்கொணரும் எனும் புரட்சி பற்றிய புதிய மதிப்பீட்டை செலுத்தியதன் மூலம் எதிர்வரக்கூடிய எத்தகைய தீமைகளையும் சந்தேகத்திற்கிடமின்றி புறந்தள்ள முடிந்தது. உடல் உழைப்பானது நகரத்திற்கும், நாட்டுப்புறத்திற்கும் இடையேயான பிணைப்பைப் பலப்படுத்தியது, தொழிலாளி- விவசாயி, அறிவுஜீவி-உடல் உழைப்பாளி – புரட்சியின் மூலம் உருவாக்கப்பட்ட பிணைப்பு அது. வயல்களில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் தங்களது உழைப்பிற்கும் புரட்சியின் ஆதாயத்துக்கும் இடையிலான நெருக்கமான இணைப்பைப் புரிந்துகொண்டனர்.  புரட்சியால் உணர்த்தப்பட்ட மதிப்பீடுகளின் வழி ஒரு தொடர் ஈடுபாட்டுணர்வு உருவாக்கப்பட்டது.

புரட்சிகர சர்வதேசியம்: ஒடுக்குமுறைக்கு முன் சமரசம் செய்துகொள்ளாத, விடுதலைக்காகப் போரிட்டு மடியவும் தயாராக இருக்கின்ற ஆண்களும் பெண்களும் இருந்ததால் கியூபப் புரட்சி சாத்தியமானது. காலப்போக்கில், அந்த எதிர்ப்புணர்வு மங்கியிருக்குமாயின், புரட்சியின் ஆன்மாவுக்கு துரோகமிழைத்த செயலாகிருக்கும். புரட்சிகர உணர்வை எவ்வாறு உயிர்ப்புடன் வைத்திருப்பது என்பதே ஒவ்வொரு புரட்சியின் கவலையாக இருந்திருக்கிறது.  கியூபா - எங்கு சேவின் சர்வதேசிய மரபு பலமாக இருந்ததோ, அங்கு இந்த விவகாரம் ஒரு சிறப்பு கவனத்தைப் பெற்றிருந்தது. சோஷலிசக் கியூபாவின்  புதிய இளைஞர், ‘உலகின் எந்த மூலையில் ஒரு மனிதன் கொல்லப்பட்டாலும் ஒருவர் கடுந்துயர் கொள்ள வேண்டும், அதேபோல் உலகின் எங்கோ ஒரு மூலையில் விடுதலையின் புதிய கொடி உயர்த்தப்படும் ஒவ்வொரு முறையும் ஒருவர் மிகுந்த உற்சாகம் கொள்ள வேண்டும்’ என்று சே நம்பினார். கியூபக் கல்வியானது குழந்தைப் பருவத்திலிருந்தே இந்தப் புரட்சிகர ஒற்றுமை உணர்வை விதைக்கிறது.

ஒரு முழுமையான அளவில், ஏகாதிபத்தியமானது எவ்வாறு விடுதலைக்கு ஆபத்தானது எனும் தொடர் நினைவூட்டலே கியூபக் கல்வி. பள்ளிக்கூடத்தில், ஆசியா, ஆஃப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் நடந்துவரும் விடுதலைப் போராட்டங்கள் மற்றும் இந்த நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் என்று பிள்ளைகள் விவாதிப்பார்கள். ஆசியர்களும் அதுகுறித்து அடிக்கடிப் பேசுவார்கள்.  முதலாளித்துவ உலகில் ‘மேற்கத்தியர்கள்’ போல் ஆயுதப் போராட்டங்கள் குறித்த ஆவணங்கள் கியூபாவில் பிரபலம்.

பழைய விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக்களைக் கொண்டாடும் இடங்களில், புரட்சியாளர்கள் மற்றும் புரட்சிகளைக் குறிக்கும் தினங்கள் கொட்டாடப்படுகின்றன. கியூபர்கள் மற்றும் இதர லத்தீன் அமெரிக்க புரட்சியாளர்களின் வாழ்கைகள் பிரபலப்படுத்தப்பட்டு, ஓராயிரம் வழிகளில் புரட்சி உணர்வு உயிர்ப்புடன் வைக்கப்படுகிறது. வியட்னாம், ஒடுக்குமுறைக்கெதிரான மனிதர்கள் பற்றிய மனதைக் கவரும் குறியீடு; விளம்பரத் தட்டிகள், சுவரொட்டிகள், பதாகைகள் என வியட்னாமின் போராட்டம் குறித்து அனைத்தும் - கியூபா எங்கும் காணப்படுகிறது.

வளரும்போது என்னவாக விரும்புகிறாய் என ஒரு கியூபக் குழந்தையிடம் கேட்டால், எவ்விதப் பாசாங்குமின்றி மிகுந்த ஆர்வத்துடன் ‘நிச்சயமாக, ஒரு கெர்ரில்லாப் போராளி ஆக வேண்டும்’ என்று சொல்லும். ஓர் இந்தியக் குழந்தை எஞ்சின் ஓட்டுனராக வேண்டும் என்று சொல்வது போல் அப்பதில் அவ்வளவு இயல்பாக இருக்கும்.

‘எங்கள் புரட்சியின் சாரம் கல்வியே’ என்றார் ஃபிடல் காஸ்த்ரோ. கல்வியறிவின்மைக்கெதிரான போர் முடிந்துவிட்டது. புரட்சிக்கு முந்தையக் கல்வியை வெறுமென்று நீட்டிப்பது புரட்சிக்கெதிரான ஒரு செயலாகி இருக்கும். கல்வியின் உள்ளடக்கமும் நோக்குநிலையும் அடிப்படையிலேயே மாற வேண்டியிருந்தது. இப்போது, சோஷலிசக் கல்விக்கான போராட்டம் தொடர்கிறது. கியூபர்கள் பெருமையாகச் சொல்வது போல் அவர்களுடையது ‘நிரந்தரக் கல்வி’. பள்ளிக்கூடத்தில் மட்டும் புரட்சிகர செய்திகள் போதிக்கப்படுவதில்லை, ஒவ்வொரு கியுபருக்கும் அவர் இருக்கும் இடம் தேடி கொடுக்கப்படுகிறது, தொழிற்சாலையில், வயல்களில், இராணுவத்தில், இரவு பகலாக வருடம் முழுவதும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கியூபரும் புரட்சிக்கு விசுவாசமாக இருக்க கல்வி துணைப் புரிகிறது.

மிகுந்த பரந்த உணர்வோடு ‘மக்களின் அணு ஆற்றலை விடுதலை’ செய்யும் நோக்குநிலையோடு உருவாக்கப்பட்டக் கல்வியால் மட்டுமே இது சாத்தியம் என்று கியூபர்கள் நம்புகின்றனர். இதுபோன்ற கல்வியை வளர்த்தெடுப்பதேப் புரட்சியின் முதல் பணியாகக் கருதப்படுகிறது.

[மைதிலி சிவராமன், Haunted by Fire, லெஃப்ட் வர்ட் புக்ஸ், 2013 வெளியீடு]


 நன்றி: கொம்பு

Related Link:

http://www.latinamericanstudies.org/cuba-education.htm

1 comment:

  1. Very nicely described. But the heart longs to see those days when brethren in the country ,the poor and oppressed lot, get education in the real sense of the word.

    ReplyDelete