Feb 17, 2014

குதிரைகள் காட்டிக் கொடுத்த நாக்கு


நேசமித்ரன்,  லக்‌ஷ்மி சரவணகுமார் அபிலாஷ் மற்றும் அதுபோன்ற ‘தூய இலக்கிய படைப்புக்கர்த்தாக்களுக்கு’,

கொற்றவை எழுதிக்கொள்வது.

வணக்கம். உங்கள் மனநலனும், உடல்நலனும் நன்றாக இருக்கிறதா?

நான் என் சொந்த வாழ்க்கை குறித்த சுய சரிதம் ஒன்றை எழுதலாம் என்றிருந்தேன். நவீன தமிழும், சிறந்த கற்பனைத் திறனும் படைத்த ஒருவர் அதை எழுத வேண்டும் என்று நினைத்தபோது எனக்கு உங்கள் பெயர்கள் அடிபட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக திறன் சார்ந்து உங்கள் பெயர் அடிபடாமல், என் படுக்கையறை வரை நீங்கள் எட்டிப்பார்க்கும் தகவல் வந்தது. அப்போதுதான் விளங்கியது, என் அனுமதி இல்லாமலேயே நீங்கள் என் சுய-சரிதையை கிசு-கிசுக்களாக உதிர்த்துவருகிறீர்கள் என்று. கிசு-கிசுக்கள் சுவாரசியத்தைக் கெடுத்துவிடும், ஒருவகையில் அது ’தனியுரிமை மீறலும் கூட’. சில வருடங்கள் பொறுத்திருந்தால் எனது வாழ்க்கையை நானே நிச்சயம் சுய-சரிதையாக எழுதுவேன் என்று உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சரி அது ஒருபுறம் இருக்கட்டும், படுக்கையறையை எட்டிப்பார்க்கும் விசயத்திற்கு வருவோம். திடீரென்று இது என்ன தலைவலி என்று நீங்கள் யோசிக்கலாம், ஆனால் உங்கள் நாவில் நரம்பின்றி நீங்கள் பேசிவரும் விசயங்கள் என் காதுகளில் வந்து சேரும்போதோ அல்லது இணையத்தில் படிக்க நேரும்போதோ எனக்கு தலைவலி வருவதில்லை மாறாக ஆத்திரம் வரும்… ஆனால் இந்த சுரணை கெட்ட வசுமித்ர அதை தணித்துவிடுகிறான்.

முதலில் நேசமித்ரனுக்கு - காலத்தில் கொஞ்சம் பின்நோக்கிச் செல்வோம்..

தேனியில் ஒரு ‘இலக்கியச் சந்திப்பு’ நடந்து, அதன் தொடர்ச்சியாக முகப்புத்தகத்தில் நீங்கள் வைத்த பதிவுகளுக்கு எனது ‘நண்பன்’ வசுமித்ர எதிர்வினையாற்றினான். அதில் உங்கள் படைப்பு சார்ந்த சில விமர்சனங்களும் வைக்கப்பட்டவுடன் நீங்கள் வெகுண்டெழுந்து இந்த சமூகத்திற்கு சில உண்மைகளைப் போட்டுடைத்தீர். ஆனால் அப்போதும் நான் மௌனம் காத்து வந்தேன். ஆனால் என் மௌனத்தை நீங்கள் உங்களின் அந்த கேவலமான போக்கிற்கு கிடைத்த வரவேற்பு சமிக்ஞையாக கருதிவிட்டீர்கள் போலும். அதை தொடர்ந்து கொண்டே இருந்தீர்கள்..

நேசமித்ரன் அப்போது நீங்கள் வசுமித்ர பற்றி வைத்த விமர்சனங்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இவர் மட்டும் என்ன பெரிய கவிஞரா, ரமேஷ் பிரதனை காப்பி அடிக்கிறார், வன்முறையாளர், பேசினால் அடிப்பார், ரவுடி, அய்யோ பயமாக இருக்கிறதே, ப்ளாட்ஃபார்ம் டிக்கெட் பின்னால் இருக்கும் ஆங்கிலம் கூட படிக்கத் தெரியாதவர் இப்படியாக படைப்பு பற்றி விமர்சனத்திற்கு நீங்கள் தனிமனித தாக்குதல்களைத் தொடுத்தீர்கள்.

ஆனால் அக்கணத்திலும் எனக்கு வியப்பாக இருந்த ஒன்று – கூடவே வாழும் ஒரு துணையான என்னிடம் நீங்கள் வசுமித்ர பற்றி புகழ்ந்தவைகள் சொற்சாட்சியாக நிற்கும் என்பதை எப்படி மறந்துபோனீர்கள் என்பதுதான். இருந்தாலும் நான் இந்த ‘இலக்கிய’ சண்டைகளுக்குள் வரக்கூடாது, இன்றைக்கு அடித்துக் கொள்வார்கள் நாளை கூடிவிடுவார்கள், போனால் போகட்டும் அவதூறுகளுக்குத்தான் 1000 சொற்கள் தேவைப்படுகிறது, உண்மை மௌனத்தின் வழி காலத்தோடு உரையாடுகிறது என்று அமைதி காத்தேன். ஆனால் தாங்கள் அந்த மௌனத்தின் மதிப்பை அறியாது போயிருக்கிறீர்கள். ஆச்சரியமாகத்தான் உள்ளது.

இதற்கு முன்னர் லக்‌ஷ்மி சரவணகுமார் - சம்பந்தேமே இன்றி, அவருக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை கூட இருந்தது கிடையாது (தமிழ் இலக்கியவாதிகள் என்றாலே அலர்ஜி ஏற்படாத குறைதான்), அவருடைய பெண் தோழி ஒருமுறை ஒரு நிகழ்ச்சியின் முடிவில் வீட்டிற்கு அழைத்தார், சென்றேன், பேசினேன், வந்தேன் அவ்வளவுதான். ஆனால் எவர் மீதோ இருந்த வெறுப்பு என் மீதான பொறாமையாக எப்படி உருவெடுத்தது என்று தெரியவில்லை. மிகவும் மோசமான ஒரு ஸ்டேட்டஸ் ஒன்றை போட்டார். அதற்கும் நான் மௌனமே காத்தேன்.  அதற்குள் ஒரு இதழாசிரியர், எங்கள் நலம் விரும்பி அவரிடம் தொடர்பு கொண்டு கண்டித்திருக்கிறார், பதிவும் நீக்கப்பட்டுவிட்டது. பின்னர் வசுமித்ர ‘இன்னா செய்தாரை அவர் நாண நண்ணையம் செய்துவிடல்’ என்பதற்கேற்ப அவரை வீட்டிற்கு அழைத்து உணவளித்து, சில அறிவுரைகளை வழங்கி, உதவி தேவையென்றால் கேட்க தயங்காதீர்கள் என்று சொல்லி அனுப்பினார். பாருங்கள் ஒரு வன்முறையாளர் தன் காதலியை தூற்றியவரிடம் எத்தனை பெரிய வன்முறையை செலுத்தியிருக்கிறார்… வசுமித்ர மாதிரி ஒரு சுரணை கெட்டவனை நான் பார்த்ததேயில்லை.

அதேபோல் லக்‌ஷ்மி சரவணகுமாரும் வசுவிடம் மன்னிப்பு கேட்டதால் அது அத்தோடு முடிந்து போனது ஆனால் இப்போது அபிலாஷ் எழுதிய பதிவின் மூலம் இந்த ‘இலக்கிய கர்த்தாக்கள்’ செய்வதென்ன என்பதை நடந்தவற்றிலிருந்தே விளக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.

 சரி நேசமிதரன், உங்கள் கதைக்கு வருவோம், நீங்கள் தென் ஆப்ரிக்காவில் இருந்தபோது முகப்புத்தகத்தில் எங்களோடு ஓரிருமுறை சாட்டிங்கில் உரையாடியிருக்கிறீர்கள். குறிப்பாக வசுவின் கவிதை பால் ஈர்ப்பு கொண்டு அவரோடு நிறைய உரையாட விருப்பத்தில் இருந்தீர்கள். பின் தமிழ்நாடு திரும்பியிருந்தீர்கள்.

கூடங்குளம் எதிர்ப்புக்காக கவிதை அரங்கம் ஒன்று ஏற்பாடு செய்யும் நிகழ்வில் நானும் ஒரு ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். அதனையொட்டி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்க உங்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர்கள் உங்களிடம் ஒருமுறை முன்னரே பேசியதாக தெரிவித்து மேலும் சில விவரங்கள் கேட்டீர்கள். (நீங்கள் ஒரு பரந்த மனதுடையவர், வளர்ந்து வருபவர், உதவிக் குணம் நிறைந்தவர், சமூக அக்கறை கொண்டவர் என்றெல்லாம் அந்த அமைப்பு தோழிகளிடம் தெரிவித்திருந்தேன்…. பாருங்கள் நான் தான் எவ்வளவு அப்பாவி என்று)

பின்னர் நமது பேச்சு இங்கு செயல்படும் பெண்கள், அவர்களது படைப்புகள் சார்ந்து சென்றது. இங்கிருக்கும் பெண்கள் பெரும்பாலும் உடல் சார்ந்து, பாலியல் தேவை சார்ந்தே சுதந்திரம் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் நான் அதிலிருந்து மாறுபட்டு எழுதுவதாகவும், பெண்களையும் நோக்கி நான் கேள்விகள் எழுப்புவதாகவும், தீவிரவாதப் பெண்ணியமல்லாத ஒரு பெண்ணியத்தை சரியாகப் பேசுவதாகவும் சொன்னீர்கள் (புகழ்ந்தீர்கள்!!). அதனாலேயே என்னைப் பொருட்படுத்தி இவ்வளவு நேரம் பேசுவதாகவும் தெரிவித்தீர்கள். அப்போது நான் சொன்னேன்: இவ்வளவுக்கும் வசுமித்ரவே காரணம், அவன் தான் நான் கவிதை என்று கிறுக்கியதை, எனது ஆண் வெறுப்பு மனோபாவத்தை, சிந்தனையை மாற்றி அமைத்தவன். அவன் ஒரு இரக்கமற்ற விமர்சகன், ஆனால் அதுதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியது என்கிற ரீதியில் பதில் சொன்னேன். நீங்களும் உங்கள் எழுத்து இன்று மெருகேறியிருப்பதற்கும் வசுமித்ர தான் காரணம், பல வருடங்களுக்கு முன்னர் அவரை சந்தித்தபோது அவர் பேசியது, அவரது சிந்தனை, கேள்விகள், கவிதை இவையெல்லாம் மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருந்ததாகச் சொன்னீர்கள்.

அதன் பிறகு கவிதை அரங்கில் நான் கவிதை வாசித்தபோது எனது கவிதையில் வசுமித்ரவின் தாக்கம் இருப்பதாகச் சொன்னீர்கள். ஆம் அவன் என் ஆசான் அவனின் மாணவியாக அறியப்படுவதில் எனக்கொன்றும் பிரச்சனை இல்லை என்றேன்…

அதன்பின்னர் தேனி நிகழ்வு… அற்பப் பேச்சுகள்…முகப்புத்தக வீரவசனங்கள்… அதில்தான் நீங்கள் வசுவைப் பற்றி மேற்சொன்ன கருத்துகளை வைத்தீர்கள்… ஐயா… அதெப்படி மற்றவரை விமர்சிக்கும்போது ஒரு சிறந்த படைப்பாளியாக இருந்த வசு, உங்களை விமர்சித்தவுடன், கேள்வி கேட்டவுடன் ரவுடியானான்? உங்கள் எழுத்தின் தரம் உயர காரணமான அறிவையும், திறனையும் பெற்றிருந்த  ஒருவன் எப்படி ரமேஷ் பிரேதனை காப்பி அடித்து எழுதுபவன் ஆனான்? சுயமாக ஒரு சொல்லை எழுதத் தெரியாதவன் – சுயம் என்றால் என்ன நேசமித்ரன், நிகண்டுகளையும், கூகிள் தேடலையும் ‘ஃபியுஷன்’ செய்யத் தெரியாதவன் என்பதன் உருவகப் பெயரா? நீங்கள் ‘சுயம்’ என்ற சொல்லை உச்சரித்தால் எனக்கென்னவோ அப்படித்தான் புரிகிறது.

ஏன் நேசமித்ரன் ப்ளாட்பார்ம் டிக்கெட் பின்னால் இருக்கும் ஆங்கிலம் படிக்கும் மொழி அறிவு பெரிதா இல்லை சக மனிதர்களிடம் உண்மையாக நடந்து கொள்ளும் பண்பு பெரிதா? உங்களுக்கு அத்தகைய பண்பிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

ஆம் அவன் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான், ஆனால் 17 வயதில் வறுமை அவன் குடல்களை தின்று கொண்டிருந்தாலும், பஸ்ஸுக்கு இருக்கும் காசில் டீ குடித்து பசியாறி… பஸ்ஸில் செல்லாது பல கிலோ மீட்டர்கள் நடந்தே ஏதாவது நூலகம் சென்று அங்கு மார்க்ஸையும், எங்கல்ஸையும், லெனினையும், புரட்சியையும், உலக இலக்கியங்களையும் (அதாவது சமூக அவலங்களை சரியான அரசியல் பார்வையோடு பேசும் படைப்புகள், உங்களைப் போன்று நிகண்டுகளை உருவேற்றி உளரும் படைப்புகள் அல்ல அவை) படித்து படித்து தனது வயிற்றை நிரப்பிக் கொள்வான். ஆமாம் அங்கில மொழியின் அவசியம் அவனிக்கில்லை ஏனென்றால் கூகிள் திரட்டியில் கட்&பேஸ்ட் செய்பவருக்கும், ஆங்கில இலக்கியங்களிலிருந்து ‘சுட’ விரும்பும் நபர்களுக்கே அதன் அவசியம் இருக்கிறது…அவருக்கு ஆங்கில அறிவு இல்லாததைப் பற்றி உமக்கென்ன கவலை…சொல்ல முடியுமா?  ஆங்கிலம் என்பது பொது அறிவா? இல்லை மொழி அறிவா? ஆங்கிலம் நம் நாட்டிற்கும், உலகிற்கும் செய்வது என்னவென்று உங்களுக்கு தெரியாதா?

ரவுடி, வன்முறையாளன் – மிகப்பெரிய வன்முறையாளர்கள் யார் தெரியுமா…அகந்தை கொண்டவர்கள், சமூக அவலங்களை மிகை உணர்ச்சியாக தங்கள் படைப்புகளில் ஏலம் விடுபவர்கள், நேர்மையற்றவர்கள், சுயநலம் மிக்கவர்கள்….இப்படியாக…

இதில் நீங்கள் எந்த இடத்தில் பொருந்துவீர்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை…

சரி உங்களது சமீபத்திய புரட்டுக்கு வருவோம்:

1.  ஊற்றி கொடுப்பது பற்றி பேசுகிறாரே வசு மட்டும் ஒழுங்கா அவர் தனது வீட்டிற்கே நண்பர்களை அழைத்து ஊற்றி கொடுக்கவில்லையா? (தம்பி நானும் ஊத்திக் கொடுத்தவந்தான் ஆனா மதுவுக்கும் சுயமரியாதை இருக்குன்னு பயந்து பயந்து செய்வேன். இங்க வெத்தலை போட்டவனெல்லாம் வித்துவான். - http://makalneya.blogspot.in/2013/06/blog-post_26.html) – விரிவாகப் பேசலாம்…வசு ஊற்றி கொடுப்பதற்கும், ‘இலக்கியவாதிகள் ஊற்றி கொடுப்பதற்கும் உள்ள வேறுபாடு தொடங்கி..)

2.  வசு கொற்றவையை அடித்து அது பல பேரிடம் பஞ்சாயத்திற்கு சென்றிருக்கிறது தெரியுமா? இவர் மட்டும் என்ன பெரிய ஒழுங்கா? – இதற்கும் அவரது படைப்பின் மீதான விமர்சனத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?  அவர் என்னை அடித்தது குறித்து நான் எப்போது உங்களிடம் முறையிட்டேன். நீங்கள் எழுத்தாளரா இல்லை கட்டப்பஞ்சாயத்துக்காரரா இல்லை ??????

மேற்சொன்ன கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன். வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தாலும் அதையும் கேட்கலாம். பதில் கிடைக்கும். ஆனால், பெண் விடுதலைச் சிந்தனை குறித்து எழுதி வரும் எனக்கு என்னைக் காத்துக் கொள்ளத் தெரியாது எனும் உங்கள் மூடநம்பிக்கை சிரிப்பை வரவழைக்கிறது.

உங்களுக்கான சில கேள்விகள்:

1.  சக பெண் எழுத்தாளர்களிடம் (பெண்களிடம்) கவிதை வாசிப்பு, கவிதை ஊக்குவிப்பு, இலக்கிய அறிவூட்டல் என ‘சேவை’ செய்துவரும் நீங்கள், உங்கள் மனைவிக்கும் அத்தகைய அறிவூட்டலை செய்கிறீர்களா? (ஒருவேளை அவருக்கு இந்த துறையில் விருப்பமில்லையென்றால், அவருக்கு விருப்பமான துறையில் அவரை ஊக்குவிக்க, முன்னேற்ற ஏதேனும் பங்களிப்பு செய்கிறீர்களா? (பொதுவாக இது நானும் வசுவும் உரையாடும் விஷயம்… இதைத்தான் அந்த நிகழ்ச்சியில் வசுவும் பேசினார்).

இலக்கியத்துறையில் உங்கள் மனைவியை வென்றெடுக்க முயற்சித்திருக்கிறீர்களா?

2.  இலக்கியக் கூட்டங்களுக்கு உங்கள் மனைவியை அழைத்து வருகிறீர்களா? வந்துருக்கிறீர்களா.. நான் பார்த்ததாக ஞாபகம் இல்லை. (இல்லையென்றால், ஏன் என்று விளக்க முடியுமா).

3. ’இலக்கியச் சேவை’ செய்ய ஊர் ஊராக பயணிப்பது போல் உங்கள் மனைவிக்கும் அத்தகைய சுதந்திரங்களை வழங்குகிறீர்களா?

4.  மேற்சொன்ன அனைத்தையும் வசுமித்ர செய்கிறான், அதற்கு மேலும் செய்கிறான்… சுயமரியாதை, சுதந்திரம், கொள்கை இவற்றை சொல்லாடல்களாக மட்டும் வைக்காமல் அதை நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்கிறான்… எல்லாவற்றிற்கும் மேல் ஒரு வன்முறையாளனாகிய அவன் எனக்கு கருப்பை சுதந்திரம் வழங்கியுள்ளான்…… உங்கள் மனைவிக்கு அத்தகைய சுதந்திரத்தை நீங்கள் வழங்கியுள்ளீர்களா? குறைந்தபட்சம் அப்படியொரு சுதந்திரம் பெண்களுக்கு உள்ளது என்பதாவது உங்களுக்கு தெரியுமா?

மேற்சொன்ன கேள்விகள் சந்தேகக்கேஸ்களுக்கு ஒரு கதைசொல்லும் கதைசொல்லியான அபிலாஷ் சந்திரனுக்கும் பொருந்தும். இந்தப் பதிவை நான் நேசமித்ரனை நோக்கி வைக்க புத்தகக் கண்காட்சி நடக்கவிருந்த சமயத்திலேயே எழுதிவிட்டேன் ஆனால் அதைப் பதிவிட வேண்டாம் என்று தடுத்தவனும் அந்த சுரணை கெட்ட வசுமித்ரதான்…

இறுதியாக

இடதுசாரி என்றால் குறி இருக்காதா அபிலாஷ் (& மற்றவர்கள்) பாருங்கள் ஒரு இடதுசாரிக்கு போய் காமம் எழுகிறது என்று மதவாதிகள் பேசுவது போல் உங்களைப் போன்றோர் பேசிவருகிறார்கள். உலகமகாக் காவியங்களை படிப்பவர்களும், தலைசிறந்த இலக்கியங்களைப் படைப்பவர்களுமான உங்களுக்கு நாகரீகம் என்ற ஒன்று தெரியாமல் போனது ஏன். கணவன் மனைவிக்குள் சண்டைகள் வரக்கூடாது என்று எண்ணுவது வேடிக்கையாக இல்லை… எல்லாவித உணர்வுகளும் உரிமைகளும் அங்கு சமமாக இடமளிக்கப்படுகிறதா என்பதே விஷயம்… எங்களுக்குள் எல்லாம் சமமாகவே இருக்கிறது… வசு எனக்காக செய்திருக்கும் தியாகங்கள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா… நீங்களெல்லாம் தாஸ்தாவெஸ்கி, அன்பு, காதல், நனவிலி மனம் என்று எழுதிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறீர்கள்… வெட்கமாக இல்லை?

பொதுவாக ‘இலக்கியம் வளர்ப்பவர்கள்’ செய்வது என்ன என்று கூட்டத்தில் வசு பேசினால் அது குறித்து உரையாடாமல் அது ஏதோ அவன் சொந்த புலம்பல் போல் மாற்றி இப்படி ஒரு கீழ்த்தரமான பதிவை எழுதும்போது உங்கள் மனைவி உங்கள் அருகில் இருந்தாரா…. ஆனால் நீங்கள் அந்தப் பதிவை இட்டிருந்த நேரம் வசு சென்னையில் இருந்தான் நான் அவனுக்கு தொலைபேசி வாயிலாக என் முத்தங்களை வழங்கிக்கொண்டிருந்தேன்… மற்ற விவரங்களை நாம் நேரில் பேசுவோம்… உங்கள் மனைவியையும் அழைத்து வாருங்கள்…. வசுபற்றி பேச என் மகளையும் அழைத்துவருகிறேன்… நான் பேசவேண்டியிருக்காது வசுபற்றிய கேள்விகளுக்கு (அவன் குணம் சார்ந்து) என் அருமை மகள் உங்களுக்குப் பதில் அளிப்பாள்

எனக்கு வசுவுடன் பிரச்சினை இருந்தால் நான் அவனை அடித்துக்கூட அதை தீர்த்துக்கொள்வேன்… உங்கள் மனைவி உங்களை அடிக்கும் சுதந்திரத்தை நீங்கள் அவருக்கு வழங்கியிருக்கிறீங்களா?  நான் உங்கள் இலக்கியச் சந்திப்புகளில் வந்து முறையிட்டேனா என் படுக்கையறையில் குறை என்று? சொல்லுங்கள்

வசுவின் நிழல் என்னைக் கண்காணிப்பதாகப் பூடகமாக எழுதியிருக்கிறீர்கள் உங்களுக்கான பதில் நித்ரா நீயல்லா வானம் ஒரு சிறு கரும்புள்ளி எனும் அவனது கவிதைத் தொகுதியில் இருக்கிறது.

குறளி இதழுக்கு ஆசிரியர்கள் வசுவும் அநந்தனும் ஆனால் ஒரு எழுத்தாளர் எப்போது பார்த்தாலும் எனக்கு ஃபோன் போட்டு குறளி குறித்து பெண் விடுதலை குறித்து பேசுவார் ஒரு எழுத்தாளர்… அதுவும் இரவில்தான்… இதை எப்படி புரிந்துக்கொள்வது… நான் பலமுறை சொல்லி விட்டேன் குறளி தொடர்பாக நீங்கள் வசுவிடம் பேசலாமே என்று ஆனால் இன்னமும் எனக்குத்தான் ஃபோன் வரும்… பலமுறை நான் போனை எடுப்பதே இல்லை… வசு பாவம் ஏன் அவாய்ட் பண்ற என்று கேட்டதற்கு… அவரிடம் பேச எனக்கு என்ன இருக்கிறது விருப்பமில்லை என்றேன்…(பாருங்கள் சந்தேகப்பேர்வழியின் கருணையை – சுரணை கெட்டவன்) இது என் சுய முடிவு… நான் பலமுறை தவிர்த்தும் அவர் இறுதியாக லேண்ட்லைனில் ஒருமுறை தொடர்புகொள்ள எண் தெரியாமல் எடுத்துவிட்டேன்… முக்கியமாக ஏதுமில்லையென்றால் பிறகு பேசுகிறேன் என்று வைத்துவிட்டேன்… இதுக்கூட நான் சொல்லித்தான் வசுவுக்கு தெரியும்… இதுபோல் இன்னும் சில தொடர்புகளை நான் தவிர்க்கிறேன்… இது என் மனநிலை சார்ந்தது இதில் உங்களின் பிரச்சினை என்ன? என்னைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா சொல்லுங்கள்?

வசுவின் நிழல் என்னைக் கண்கானிப்பதாக எழுதியுள்ளீர்கள்…. உங்களது குறி கண்காணிக்கிறதா இல்லையா என்று நான் காயத்ரியிடம் கேட்கலாமா அபிலாஷ்… இந்தக் கேள்வி நேசமித்ரனுக்கும் பொருந்தும்…. அந்தக் குழந்தையை அவர் அடிக்காமல் பார்த்துக்கொள்கிறாரா என்று எவரேனும் எனக்குக் கேட்டுச் சொல்லலாம்…

நான் தாலி அணிவதில்லை, மெட்டி பொட்டு, வளையல் ஏதும் கிடையாது உங்கள் மனைவிகள் அப்படி இருக்கிறார்களா? என் அத்தை வீரலட்சுமி தாஸ்தாவெஸ்கி, சில்வியா ப்ளாத், போர்தியு, சார்த்தர், நீட்ஷே ஏன் பெரியாரைக் கூட படித்ததில்லை… அவளது அம்மா செல்லம்மா பள்ளிக்குக்கூட சென்றதில்லை ஆனால் இவர்கள்கூட என் வெளிப்பாடு பற்றி கவலைப்பட்டதில்லை… ஏன் பிள்ளை வேண்டி எங்கள் படுக்கையறையை எட்டிப்பார்ப்பதில்லை… நீங்களோ உங்கள்  தாயாரோ உங்கள் மனைவிக்கு கருப்பை சுதந்திரம் கொடுத்துள்ளீர்களா… கொடுப்பீர்களா?

மீண்டும் ஒருமுறை ஆணித்தரமாக சொல்கிறேன் என் சுயசரிதையை எழுதும் உரிமையை நான் இதுவரை யாருக்கும் வழங்கியதில்லை… இனியும் வழங்கப்போவதில்லை… கிசுகிசுக்களாக எழுதி என் வாழ்வின் அற்புதங்களை வெற்றுச் சொற்களாக விரயமாக்காதீர்கள்…







2 comments:

  1. Great, a question that has to be answered...

    ReplyDelete
  2. அபிலாஷ் அவர்களின் பதிவை முன்னிட்டு இரண்டு நாட்களாக சிலப் பதிவுகளையும் எதிர்வினைகளையும் பதிவு செய்திருந்தேன். நீண்ட மௌனம் அதனைத் தொடர்ந்த சிலப் பதிவுகள் என்று தொடர்ந்த ஓர் நிகழ்வு இன்று முடிவுக்கு வருகிறது. அபிலாஷ் தொடர்பு கொண்டு தனது வருத்தங்களைப் பதிவு செய்தார், நான் அதைப் பொது வெளியில் பதிவு செய்யுங்கள் என்று கூறினேன். அதை அவர் செய்திருப்பதாகத் தெரிகிறது.

    வருத்தம் தெரிவித்து அவர் எழுதியிருக்கும் பதிவில் அக்கதை என்னைப் பற்றியும் வசுவைப் பற்றியும் எழுதவில்லை என்று விளக்கம் தந்துள்ளார். வருத்தம் தெரிவித்த அவரது பண்பை நான் மதிக்கிறேன். அதேவேளை அப்பதிவில் அவர் எவரைக் குறிப்பிட்டு எழுதியிருந்தாலும் அது தவறே. எவருடைய அந்தரங்கத்தையும் பற்றி எழுதும் உரிமை எவருக்குமில்லை. கணவன் மனைவி (அல்லது காதலர்) உறவில் எல்லாவிதமான உணர்வுகளுக்கும் இடமுண்டு, அது சமத்துவத்தோடு நிலவுகிறதா என்பதே கவனத்திற்குரியது.

    வாள் முனையைவிட பேனா முனை கூர்மையானது என்ற பழமொழியை நினைவு கூர்கிறேன். அதை இப்படி அவதூறுகளை எழுதி மழுங்கடிக்கும் இந்த ‘தமிழ் இலக்கியப் போக்கு’ இத்தோடு முடிவுக்கு வரட்டும். சம்பந்தப்பட்ட அந்தப் பதிவுகளை நீக்குகிறேன். ஆனால் நேசமித்ரன் இன்னும் மன்னிப்பு கேட்காததால் அவருக்கு வைத்தக் கேள்விகள் நீக்கப்படமாட்டா. (நேசமித்ரன் தவிர மற்றவர்கள் பற்றி எழுதிய அனைத்து குறிப்புகளும் நீக்கப்பட்டுவிட்டது)
    ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete