Oct 25, 2012

சின்மயி விவகாரத்தில் அவர் அவர்கள் எடுத்துக்கொள்ளும் இடை வரிகள்:

பாடகி சின்மயியின் சில கருத்துக்கள் அது தொடர்பான எதிர்கருத்துக்கள், அதைத் தொடர்ந்த ஆபாசப் பதிவுகள், ஆணாதிக்கப் பேச்சுக்கள், புகார்கள் கைதுகள் என்று தற்போது அரங்கேறியிருக்கும் ஒரு நிகழ்வில் நிறைய கருத்துக்கள் பரிமாறப்படுகின்றன. ஊடகங்கள் வாயிலாக (புதிய தலைமுறை, NDTV Hindu) நானும் எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டேன். அதில் அவர் அவருக்
கு விருப்பமான, அல்லது சார்பான இடைவரிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளும் ஒரு ஆபத்து இருப்பதை உணர்கிறேன். அதனால் சில விளக்கங்களை கொடுப்பது அவசியமாகிறது. 


இந்த விவகாரத்தில் இரண்டு எதிர்நிலைகளை பெரும்பான்மை மனநிலையாகக் காண முடிகிறது, ஒன்று தமிழ் உணர்வாளர், தலித் ஆதரவாளர் என்பதும் மற்றொன்று அது அல்லாதவர் என்பதும். கண்ணோட்டங்களில் சாதி, வர்க்கம் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்து இந்த பிரச்சனையை மதிப்பிடுவது அவசர புரிதல்களுக்கும் தவறான புரிதல்களுக்கும் இட்டுச் செல்வதைக் காண முடிகிறது.

முதலில் ஆணாதிக்கப் பேச்சுக்களை கருத்துச் சுதந்திரம் என்பதில் சேர்த்துக் கொள்ள முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்திருக்கும். இது பிறப்பிலேயே தோன்றுவதன்று மாறாக சமூகமயமாக்கப்படும் ஒரு நிகழ்விலிருந்து தோன்றுகிறது. அது புரிதல் சார்ந்த பிரச்சனை. இந்த புரிதலில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுதல், புன்படும் வகையான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தல் என்கிற அளவோடு அதை நிறுத்துக் கொள்வதே ஜனநாயகம். கருத்தை கருத்தாக பாவிக்காமல் தனி நபர் அவதூறாக, பாலியல் வசைகளாக, தனிப்பட்ட வாழ்வை எடுத்து பேசுவது, குறிப்பாக பாலியல் அடையாளத்தின் அடிப்படையில் ஆணாதிக்க மனோபாவத்தைக் வெளிக்காட்டுவது நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

தனிநபர் பொறுப்புணர்வு, அரசியல் நாகரீகம், பேச்சு நாகரீகம், விவாதப் பண்பு ஆகியவை இல்லாத ஒரு சமூகத்தில் பாதிக்கப்பட்டவர் காவல்துறையை நாடுவதைத் தவிர வேறு சாத்தியங்கள் இல்லை. அந்த வகையில் சின்மயி தன்னையும், தன் தாயையும் இழிவு படுத்தியவர்களுக்கெதிராக புகார் கொடுத்தது வரவேற்கத்தக்கதே. எல்லா நேரமும் பெண்கள் இந்த வன்கொடுமைகளை சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதற்கு முன் உதாரணம். புகாரைத் தொடர்ந்து வரும் விளக்கங்களில் ஆபாசமாகப் பேசியவர்கள் மட்டுமல்லாது எள்ளல் தொணியில் பேசியவர்கள் மீதும் சின்மயி புகார் அளித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியிருந்தால் அது முதிர்ச்சியின்மை. தன்னுடைய பிரபல்ய அடையாளத்தை தவறாக பயன் படுத்தும் ஒரு செயல் என்று முடிவுக்கு வரலாம்.

இப்போது ஊடகங்கள் வாயிலாக நான் பகிர்ந்த கருத்துக்கள்:

NDTV Hindu: தொலைபேசி பேட்டி, இதில் சின்மயி விவகாரத்தை நேரடியாகப் பேசாமல், பெண்களுக்கெதிரான இணையதள குற்றங்கள் என்று பேசினார்கள்.

எனக்கு இனைப்பு கிடைத்தபோது எனது காதில் விழுந்தவை: “இந்த காரணங்களால் தான் சொல்கிறேன் இந்த ஊடகத்திலிருந்து பெண்கள் ஒதுங்கியிருத்தல் நல்லது என்று”

நான் சொன்னது (சொல் வாரியாக நினைவில்லை.. சாரம்): எல்லா நேரங்களிலும் எல்லா எச்சரிக்கையும், ஆலோசனைகளும் பெண்களை நோக்கியே வைக்கப்படுகிறது. பெண்ணாய் இருப்பதால் இந்த சமூக வலைதளங்களில் இப்படித்தான் தொல்லைகள் இருக்கும், அதனால் ஒதுங்கியிருங்கள் என்று சொல்வது தவறு. பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள் என்று சொவது வேறு. அது இரு பாலாறுக்கும் பொருந்தும்.

இதைத் தொடர்ந்து அவர் (காவல்துறை அதிகாரி கருணாநிதி என்று நிகழ்ச்சியின் ஊடே சொல்லப்பட்டது) யார் பாதிக்கபப்டுவார்களோ அவர்களுக்குத்தான் ஆலோசனைகள் வழங்கப்படும்.... முள்ளு மேல சேல விழுந்தாலும்....சேல மேல முள்ளு விழுந்தாலும்....பெண்கள் vulnerable அதனால் தான் சொல்கிறோம் என்பதாகப் பேசினார்.

பெண்கள் வல்னரபுல் என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது, அது சமூகப் பார்வை அதற்கு காரணம் ஆணாதிக்கம்.... பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் என்றால் அந்த பாதிப்பை ஏற்படுத்துபவர்களை எச்சரிக்க வேண்டும் அதை விடுத்து ஒதுங்கியிருங்கள் என்று சொல்வது சரியல்ல...அது அக்கறையிலிருந்தே வந்தாலும் சரியானதல்ல....இது தீர்வை வழங்காது என்றேன்.

அத்தோடு எள்ளல் என்கிற பெயரில் சிலர் அத்துமீறும்போது அவர்களால் மற்றவருக்கு நேரும் இடைஞ்சல்களை கணக்கில் எடுத்துக் கொள்ள தவறுகின்றனர். குறிப்பாக மாற்று அரசியல் பேசுபபவர்களுக்கு இணையம் ஒரு முக்கிய ஊடகமாக இருக்கிறது, இது போன்ற சிலரது தவறான கையாடலால் தணிக்கைகள், முடக்கங்கள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

இறுதியாக பெண்கள் இப்படி வந்து புகார் அளிக்க வேண்டுமா..என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி:

நிச்சயமாகப் பெண்கள் தங்களுக்கெதிரான அத்தனை பாலியல் ஒடுக்குமுறைகளையும் வெளியில் பேச வேண்டும், அதற்கெதிராக புகார்கள் அளிக்க வேண்டும். அதை அவமானம் என்று கருதி அடங்கிவிடக்கூடாது. குறிப்பாக ஆபாசப் புகைப்பட சேட்டைகளுக்கு இலக்காகும் பெண்கள் அதை பெரும் அவமானமாகக் கருதாமல் அதை வெளிப்படுத்த வேண்டும். ஆனால் வெகு சிலரே அதைச் செய்கின்றனர். மார்ஃபிங் தொழில்நுட்ப அத்துமீறல் என்றிருந்தாலும் கூட நாம் இத்தகைய ஒரு நிலைக்கு ஆளாகிவிட்டோமே என்று மனம் புழுங்கி வருந்துவது தேவையில்லை.... இதுபோன்ற அத்துமீறல்களை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அடுத்து புதிய தலைமுறை பேட்டி... (காணொளி உள்ளது.).

ஒரு பெண் என்பதால் தொடுக்கப்பட்ட பாலியல் அவதூறு, இழிவு படுத்தும் பேச்சுக்கள், தாயை ஆபாசமாக பழிக்கும் சொற்கள் கண்டிக்கத்தக்கவையே. எதிர்தரப்பின் பேச்சுக்கள் ஆபாசமாகக் கருதப்படுவதுபோல், இந்தியாவின் சாதியச் செயல்பாடு குறித்த புரிதலின்றி தான் வளர்ந்திருக்கும் ஆதிக்க சாதி, மேட்டுக்குடி வர்க்கப் பார்வையில் சின்மயி வைத்த கருத்துக்களும் ஆபாசமானவையே. குறிப்பாக “so called oppressors’ என்கிற பதம்.

13 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சிறப்பான அலசல்! ஆபாசமும் ஜாதிய பேச்சும் கண்டிக்கத்தக்கது! இது சின்மயிக்கும் பொருந்தும்!

    ReplyDelete
  3. அவரவர்களுக்குச் சாதகமான வரிகளை எடுத்துக்கொள்வது என்பது பல விசியத்திலும் நடைபெற்றே வருகிறது. அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் கொடுக்கவேண்டி உள்ளது. அதனால் அந்த விசியம் வளர்ந்து கொண்டே போகிறது.

    உங்கள் விவாதத்தில் ம.புத்திரன் சொல்லியதைத்தான் நானும் சொல்ல வேண்டி உள்ளது. அழுக்குப் பிடித்த சமுதாயத்தில் வேறு என்ன எதிர்பார்த்துவிட முடியும்.

    பிரச்சினையை விடுத்து பயன்படுத்தும் சொற்களுக்காவது கட்டுப்பாடு வேண்டும். இதைச்சொன்னால் தடையற்ற சோசியல் சுதந்திரம் பாதிக்கப்படுவதாய் பிரளயமாய் கிளம்பிவிடுவார்கள் சோசியல் புரட்சியாளர்கள். இங்கதான் எது எதுக்குக் கிளம்புவது என்கிற வரைமுறையே இல்லையே.

    விவாதங்களில் ஈடுபடும்போது வன்சொற்களை மற்றும் ஆபாசச் சொற்களை உதிர்ப்பது என்பது அவரவர் தோல்விக்குச் சமானம். mother fu**er, you should be gang raped, மண்டையா.. பு...யா.. சாமீ இதையெல்லாம் புழங்குவதற்கு எங்கிருந்து யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது. சொற்களைப் பிரயோகப்படுத்துதல் என்பதில் தயவு தாட்சணியம் இருக்கக்கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.

    சொற்கள் இரத்த அழுத்தத்தைத் தூண்டுபவை. இதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தெருவில் வாந்தி எடுக்கக்கூடாதுன்னா எடுக்கக்கூடாதுதான். வாந்தி எடுக்கும் சுதந்திரம் கெடுகிறது என்று குடிமகன்(ள்)கள் சண்டைக்கு வருவாங்க என்பதற்காக சட்டம் போடாதிருக்க முடியுமா?

    அரசாங்கத்தால் சட்டம் போட இயலாதிருக்கலாம் கொற்றவை. ஆனால் சோசியலில் அவரவர் வெளிப்பாடு என்பது நிறுவன நேர்முகங்களிலேயே வந்துவிட்டது. அது கடுமையாகப்படவேண்டும். அப்போது வாதத்திற்கு மட்டும் வருவார்கள். நயமான சொற்களோடு. இருதரப்பிற்குமே அது பொருந்தும்!

    தேவை - கட்டுப்பாடான சுதந்திரம்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Mani maranOctober 29, 2012 10:28 AM
    கேள்விக்கு பதிலளிக்கமாட்டீர்களா? தவறாக ஏதேனும் கேட்டுவிட்டேனோ??????? - மொத்தமாக பப்லிஷ் செய்ததால் கவனிக்கவில்லை.

    பெரிய காரணங்கள் ஒன்றும் இல்லை. நான் தொடக்கத்தில் கவிதை எழுதவே பேனா பிடித்தேன், பின்னர் சமூக நடப்புகள், இடதுசாரி அரசியல் தெரிந்தபின்னர் என் தேர்வுகள் மாறியது.

    எழுத்து என்பது கலகக்குரல், குறிப்பாக அதிகார வர்க்கம் எதையெல்லாம் அழுக்கு, அபசகுனம் என்று சொல்கிறதோ அதை நேர்மறையாக (positive) மாற்றுவதற்கு கவிதை ஒரு சிறந்த ஊடகம், அதனால் மரணம் என்பதை பயமென விதைத்திருக்கும் ஒரு சமூகத்தில் மரணம் பேசினால் எப்படியிருக்கும் என்பதற்கான ஒரு குறியீட்டு பெயர்....

    Human beings categorized positive and negative, am writing to make negative to positive...

    நன்றி.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நன்றி மணி மாறன். எல்லாம் புரிந்தேயாக வேண்டும் என்று நினைப்பது கூட ஒருவகை கட்டமைப்பே.... அதேபோல் எல்லாவற்றிற்கு காரணம் வேண்டும், நியாப்பாடு வேண்டும், பொறுத்தப்பாடு வேண்டும் என்பது ஒரு பழக்கப்பட்ட மனநிலை....அதிலிருந்து நம்மை மீட்டெடுக்க உதவுதது கலை என்பது எனது புரிதல்... பெயரில் ஒன்றுமில்லை...

    ReplyDelete
  8. நான் மிகவும் ரசித்த பின்னூட்டம் இதுவே.... கவிதையும் விளங்கவில்லை, உரைநடையும் விளங்கவில்லை.........அதற்கு பதிலாக....சமுதாயமே விளங்காத ஒன்றுதானே என்று சொல்வதைத்தவிர வேறெதுவும் சொல்ல முடியவில்லை. உங்கள் தொடர் வாசிப்புக்கு நன்றி...

    ஒருவேளை அச்சு வடிவத்தில் வந்தபின்பு படித்தால் புரியுமோ என்னவோ....

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. இந்த அக்கா எனும் அழைப்பை தவிர்த்து தோழர் என்று வைத்துக்கொள்ளலாம்...

    அரசியல் என்ற ஒன்று வெறும் மேடைப் பேச்சோ, எழுத்தோ அல்ல... அது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் ஒன்று...எல்லாமே அரசியலின் விளைவாகத்தான் நடக்கிறது....நான் எப்போதும் மார்க்சியத்தை அடித்தளமாகக் கொண்டு செயல்படுவேன்...அதற்கு விசுவாசமாக இருக்க முடியாமல் போனால், இந்த தளத்திலிருந்து விலகிவிடுவேன்...

    என்னுடைய எழுத்து சிற்றிதழ்களில் வெளிவருகிறது - உயிர் எழுத்து, அடவி, தற்போது புதிதாய் வந்துள்ள குறளி... பிறகு கல்குதிரை போன்ற இதழ்கள்...

    என்னுடைய மகள் பற்றிய குறிப்பையும், இணையதளத்தையும் பார்த்ததாக குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த குறிப்பை எங்கு கண்டீர்கள்.

    நன்றி

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. அவள் என் மகள் தான். தவறான புரிதல் எதுவும் இல்லை.

    உங்கள் மார்க்சிய ஒவ்வாமை இங்குள்ள மார்க்சியக் கட்சிகளின் செயல்பாட்டால் வந்திருக்கலாம்... மார்க்சியம் என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சொத்தல்ல... அதைவைத்து நீங்கள் எல்லோரையும் மதிப்பிடுவது சரியன்று.

    தோழர் என்பது ஒரு சமத்துவ சொல்லாடல்...குறிப்பாக சாதி, பால்பேதங்களைக் களைவதற்கும் அது அவசியமாகிறது...அதையே நான் விரும்புகிறேன்... அதேபோல் உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் I am a marxist...

    நான் ஓய்வெடுத்துக் கொள்வது குறைவு... நிறைவு செய்ய வேண்டிய எழுத்துப் பணிகள் நிறைய உள்ளது... உங்கள் கேள்விகளை kotravaiwrites@gmail.com இற்கு அனுப்பவும்... நன்றி.

    ReplyDelete